தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழுக் கூட்டம் நான்குனேரியில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் பொ. செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மரியவில்சன், பொதுக்குழு உறுப்பினர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் செ. பால்ராஜ் சிறப்புரையாற்றினார். ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.
பள்ளிகள் இணைப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும். 3ஆம் பருவ வகுப்புகள் தொடங்கி 55 நாளாகியும் மாணவர்களுக்கு நோட்டுகள் முழுமையாக வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். நான்குனேரி வட்டார கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆன்-லைன் வருகைப்பதிவு முறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும், உடல்நலக் குறைவானோருக்கும் மக்களவைத் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டாரப் பொருளாளர் அ. ஐயப்பன், முருகேசன், வடுகநாதன், நல்லக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டாரச் செயலர் வி.செ. ஜோசப்துரை வரவேற்றார்.