திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை 5-ஆவது கட்ட அம்மா திட்டம் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, திருநெல்வேலி வட்டம் கரையிருப்பு, ராதாபுரம் வட்டம் விஜயாபதி, அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரமசிங்கபுரம், நான்குநேரி வட்டம் கீழகாடுவெட்டி, சேரன்மகாதேவி வட்டம் அத்தாளநல்லூர், பாளையங்கோட்டை வட்டம் தருவை, சங்கரன்கோவில் வட்டம் கீழ வீரசிகாமணி, திருவேங்கடம் வட்டம் ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இம் முகாமில், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.