முறையான ஊதியம் வழங்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வாசலில் துப்புரவு தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
சங்கர் நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் மனு அளித்தனர். மனு விவரம்:
சங்கர்நகர் சிறப்புநிலை பேரூராட்சியில் சுமார் 24 பேர் துப்புரவு பணி செய்து வருகிறோம். மேற்பார்வை பணி செய்யும் நபர் எங்களை அவமதிக்கிறார். எங்களுக்கு உரிய ஊதியத்தை சரியாக கொடுப்பது இல்லை. விடுமுறைகள் முறையாக வழங்க மறுப்பதோடு மிரட்டியும் வருகிறார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.