திருநெல்வேலி நகரத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
திருநெல்வேலி நகரம், காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெற குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர். பிற்பகலில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கக் கூறியுள்ளதாகவும், அந்த அளவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து விநியோகத்தை ஊழியர்கள் நிறுத்தினர். இதற்கு பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். காலை முதல் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கக் கோரி ரேஷன் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.