களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதியம்பாள் திருக்கோயிலில் கணுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் கணுத் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவை யொட்டி, சுவாமி-அம்பாள், சந்திரசேகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தனித் தனி சப்பரங்களில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
ரத வீதிகளில் வலம் வந்த சுவாமி, அம்பாளுக்கு பக்தர்கள் தேங்காய்-பழம் உடைத்து வழிபட்டனர். இரவில் சுவாமி, அம்பாள், சந்திரசேகர் சுவாமிகளுக்கு களக்காடு - நாகர்கோவில் சாலையில் உள்ள பிள்ளைமடத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. அங்கிருந்து வியாழக்கிழமை அதிகாலை புறப்படும் சுவாமி, அம்பாள், சந்திரசேகர் சுவாமி சப்பரங்கள் வீதியுலா வந்து கோயிலை வந்தடைந்தது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.