மதிமுக பொதுச்செயலர் வைகோ தனது சொந்த ஊரில் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டி. இவர் ஆண்டுதோறும் பொங்கலையொட்டி தனது கிராமத்துக்கு வந்து மக்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவதுடன், இளைஞர்கள், மாணவர்களுக்குப் போட்டி நடத்தி பரிசு வழங்குவார்.
நிகழாண்டு பொங்கலையொட்டி, கடந்த 13ஆம் தேதி கலிங்கப்பட்டிக்கு வந்த வைகோ, பல்வேறு போட்டிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை வீடுவீடாகச் சென்று, மக்களுக்கு வாழ்த்துக் கூறினார்; பல இடங்களில் கட்சிக் கொடியேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா பொங்கல். ஆனால் விவசாயிகளைப் பொருத்தவரை இது கண்ணீர்ப் பொங்கல். பயிரிட்ட மக்காச்சோளம் அழுகியதால் விவசாயிகள் வருமானம் இழந்துள்ளனர். கஜா புயலால் 4 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
நெல்லை மேற்கு மாவட்டச் செயலர் தி.மு. ராஜேந்திரன், திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.