திருநெல்வேலியில் சத்யநாராயண பூஜை இம் மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் அகில உலக செயல்தலைவர் வேதாந்தம்ஜி.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: மனிதர்கள் துன்பங்கள், ஆரோக்கிய குறைபாடுகளால் தவித்து வரும் சூழலில் அவர்களது கஷ்டங்கள் தீர தம்பதியராய் சத்ய நாராயண பூஜை செய்து வழிபட்டால் வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் உருவாகும். தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத், தாமிரபரணி புஷ்கர விழாக்குழு ஆகியவை சார்பில் திருநெல்வேலி தைப்பூச படித்துறையில் இம் மாதம் 20 ஆம் தேதி மாலை 3 மணிக்கு சத்ய நாராயண பூஜை நடைபெற உள்ளது. இதேநாளில் ஈரோடு, சேலம், திருச்சி, சென்னை உள்பட மொத்தம் 16 இடங்களில் இப்பூஜை நடைபெறுகிறது. திருநெல்வேலியில் நடைபெறும் பூஜையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். பூஜையில் நான்குனேரி ராமானுஜ ஜீயர், வேளாக்குறிச்சி ஆதீனம் மகாதேவ தேசிக பரமாச்சார்யா சுவாமிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். சத்ய நாராயண பூஜையை தொடர்ந்து செய்து வருவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நற்பலன்கள் பெருகும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். கல்வி வளர்ச்சி கிடைக்கும் என்றார் அவர்.
பேட்டியின்போது, ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் பள்ளித் தாளாளர் உஷாராமன், நிர்மல் ராமரத்தினம், கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியன், விஜய் சுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.