தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.செய்யதுசுலைமான் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலர் அப்துல் மஜீத், மாநில துணைச் செயலர் வி.டி.எஸ்.ஆர். முகம்மதுஇஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச் செயலர் முகம்மது அபூபக்கர் பங்கேற்று பேசினார்.
பிப்.16இல் மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்திலிருந்து 5ஆயிரம் பேர் கலந்துகொள்வது; கடையநல்லூர் இக்பால் நகர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்; கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நகர்பகுதியில் அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாநிலதுணைத் தலைவர் செய்யது பட்டாணி, மாவட்ட இளைஞரணி தலைவர் நவாஸ்கான், செய்யது மசூது, புளியங்குடி சாகுல்ஹமீது, முகம்மது அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலர் இக்பால் வரவேற்றார். பொருளாளர் செய்யது இப்ராகீம் நன்றி கூறினார்.