பாளையங்கோட்டையில் நடைபெற்ற தென்னிந்திய பெண்கள் வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நெல்லை ப்ரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், நெல்லை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மயன் கோப்பைக்கான வாலிபால் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரளம், ஆந்திரம் உள்பட தென்னிந்தியவில் உள்ள கல்லூரி அணிகள் பங்கேற்றன. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி, திருச்சூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை 17-25, 25-17, 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மயன் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
புள்ளிகள் அடிப்படையில் கோட்டயம் அல்போன்ஸ் கல்லூரி அணி 2 ஆம் இடமும், திருச்சூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணி 3 ஆம் இடமும், கோபி பி.கே.ஆர். கல்லூரி அணி 4 ஆம் இடமும் பிடித்தன. பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒய். ஜான்நிக்கல்சன், மயன் நிர்வாக இயக்குநர் டி.டி. ரமேஷ்ராஜா தலைமை வகித்தனர் . மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆ.பழனி, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார்.
தென் மாவட்ட ஆண்கள் அமர்வு வாலிபால் போட்டியில் கன்னியாகுமரி அணி முதலிடமும், தூத்துக்குடி முத்துநகர் அணி 2 ஆவது இடமும் பிடித்தன. போட்டி ஒருங்கிணைப்புச் செயலர் பாஸ்கர், நாராயணன், சேவியர் ஜோசப் உள்பட பலர் பங்கேற்றனர்.