திருநெல்வேலி சந்திப்பு நிலையத்துக்கு புதன்கிழமை வந்த விரைவு ரயிலில் கிடந்த இளைஞர் சடலத்தை ரயில்வே போலீஸார் மீட்டு, விசாரித்துவருகின்றனர்.
கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை திருநெல்வேலி சந்திப்பு வந்தது. இதில், 2 பெட்டிகளை இணைக்கும் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் சடலம் சிக்கியிருந்தது.
இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சந்திப்பு ரயில் நிலைய ஆய்வாளர் அருள் ஜெயபால், போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக, இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து அரை மணிநேரம் தாமதமாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டது.