இயற்கையைப் பாதுகாக்க நாம் தவறிவருகிறோம் என்றார் எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், சங்கரன்கோவிலில் இலக்கிய வானம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ஓவிய ஆசிரியர் சுபத்ராராஜ் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கு. செல்வராஜ், ஆ. ரவி, பா. அலெக்ஸ்மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மு.சு. மதியழகன் வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து, வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். லட்சுமணப்பெருமாள் பேசியது:
பூச்சியினம் அழிந்துவிட்டால், நாம் இல்லை. குறிப்பாக, தேனீக்கள் இல்லையென்றால், 4 ஆண்டுகளில் மனித இனமே பூண்டோடு அழிந்துவிடும். தேனீக்கள் இருந்தால்தான் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். மகரந்தச் சேர்க்கை இல்லாமல் எதுவும் விளையாது. எல்லா உயிரினங்களாலும் நன்மைதான். ஆனால், மனிதனால் நன்மை இல்லை. இயற்கையைப் பாதுகாக்க, குடிநீரை பாதுகாக்க நாம் தவறிவருகிறோம். கல்வியும், குடிநீரும் வியாபாரமாகக் கூடாது. இதேநிலை நீடித்தால் நாம் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சுபா. தர்மலிங்கம், புலவர் த. மாரியப்பன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலர் வே. சங்கர்ராம், தலைவர் இளங்கோ கண்ணன், ஆசிரியர் பூ. மாரி, ஆத்திவிநாயகம், தமுஎகச மாவட்டத் துணைச் செயலர் ந. செந்தில்வேல், அ. திருவள்ளுவர், சபரிசுப்பிரமணியன், வே. மாரிமுத்து, சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, ப. தண்டபாணி, தபேலா கலைஞர் சுப்பிரமணியன் ஆகியோரின் தமிழிசையும், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. தமுஎகச கிளைச் செயலர் மூர்த்தி வரவேற்றார். கோ. சங்கரநாராயணன் நன்றி கூறினார்.