சாம்பவர்வடகரை பேரூராட்சியில் மின் மோட்டார் பழுதால் கடந்த 2 மாதமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மின்மோட்டார் சீரமைக்கப்பட்டு, சீராக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
சாம்பவர்வடகரை பேரூராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் மற்றும் உள்ளூர் நீராதாரத்தில் ரூ. 50 லட்சத்தில் அனுமன் நதிக்கரையோரம் அமைக்கப்பட்ட கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்ப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதமாக மின்மோட்டார் பழுதால் உள்ளூர் நீராதாரம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது.
இதனையடுத்து அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக பழுதான மின்மோட்டாரை சீரமைத்து, செவ்வாய்க்கிழமை முதல் அனுமன் நதிக்கரையில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீரை பேரூராட்சி மக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.