ஆலங்குளம் அருகே கேரளத்திலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் முறைகேடாக எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எழும் புகையால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை, குறிப்பன்குளம் கிராமப் பகுதிகளில் கேரளத்தில் இருந்து முறைகேடான முறையில் கொண்டு வரப்படும் குப்பைகள், மது பாட்டில்கள், மாமிசம், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
மலை போல குவிந்து கிடக்கும் அந்தக் கழிவுகள் தரம் வாரியாக பிரித்து எடுக்கப்பட்டு தேவையான பொருள்களை எடுத்து விட்டு மீதம் உள்ள கழிவுகளை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிடுகின்றனர்.
இது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் குறிப்பன்குளம் கிராமத்துக்கு மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் மர்ம நபர்களால் அந்தக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனால் அந்தப் பகுதியில் புகை மூட்டமாக கிளம்பி தூர் நாற்றம் வீசியது. எரிக்கப்பட்ட கழிவுகளால் அருகில் உள்ள குறிப்பன்குளம், குருவன்கோட்டை, கீழ பட்டமுடையார்புரம் பகுதிகளுக்குள் புகை பரவியது.
இதனால் பொதுமக்கள் மூச்சுத் திணறலால் பாதிப்படைந்தனர். மேலும் காற்று பலமாக வீசியதால் தீயின் வேகம் அதிகரித்தது.
தகவலறிந்து வந்த ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கணேஷ் தலைமையிலான வீரர்கள், கழிவுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.