நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: நாளை போக்குவரத்து மாற்றம்

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில்
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி டவுண் நான்கு ரதவீதிகள் மற்றும் தெற்கு மவுண்ட் ரோடு மற்றும் நயினார்குளம் சாலை ஆகிய பகுதிகளில் முற்றிலுமாக போக்குவரத்து தடைசெய்யப்படுகிறது. திருநெல்வேலி
சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக டவுண் வரும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் அருணகிரி திரையரங்கு வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பேருந்துகள் தவிர, இதர வாகனங்கள் சாப்டர்
மேல்நிலைப் பள்ளி மற்றும் டவுண் அலங்கார வளைவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நகரம் வரும் பேருந்துகள் அனைத்தும் அருணகிரி திரையரங்கு அருகே பயணிகளை இறக்கிவிட்டு, தாமதம் செய்யாமல் உடனே
திரும்ப வேண்டும். தென்காசி வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வண்ணார்பேட்டை வழியாக ராமையன்பட்டி, கண்டிகைப்பேரி சாலையைப் பயன்படுத்தி
பழையபேட்டை சென்று அதே வழியில் திரும்ப வரவேண்டும்.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக பேட்டை சுத்தமல்லி செல்லும் நகரப் பேருந்துகள் கண்டிகைப்பேரி வழியாக பழையபேட்டையை சென்றடைந்து இணைப்பு சாலையின் மூலம் பேட்டை
செல்ல வேண்டும். 
திரும்ப வரும்போது தொண்டர் சன்னதி, சாலியர்தெரு வழியாக தச்சநல்லூர் வரவேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து முக்கூடல் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் சேரன்மகாதேவி
வழியாக சென்று அதே வழியில் திரும்ப வரவேண்டும்.


பலத்த பாதுகாப்பு
நெல்லையப்பர் கோயில் தேரோட்ட விழாவையொட்டி  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர்கள் சரவணன்
(சட்டம்-ஒழுங்கு),  மகேஷ்குமார் (குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆகியோர் அறிவுரைப்படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோயில் அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். 300-க்கும் மேற்பட்ட குற்றப்பிரிவு போலீஸார் சாதராண உடையில்
கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். கோயில் உள்புறம், நான்கு ரதவீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வானூர்தி கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் அவசரகால நடவடிக்கைக்காக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஆர்ச், சத்திய மூர்த்தி தெரு, சொக்கப்பனை
முக்கு வழியாக செல்ல வேண்டும். தென்காசியிலிருந்து வரும் மீட்பு மற்றும் அவசர கால வாகனங்கள்  தொண்டர் சன்னதி, புட்டாரத்தி அம்மன் கோயில், நயினார்குளம், ஆர்ச் வழியாக செல்ல
வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com