வரலாற்றுக்கு அடிப்படைச் சான்று தொல்லியல் என தொல்லியல் அறிஞர் குழந்தை வேலன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் மற்றும் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சோ.அரிராமா தலைமை வகித்தார். வரலாற்றாசிரியர் பெ.ஜோசப் அந்தோணி மைக்கேல் வரவேற்றார். தொல்லியல் ஆய்வாளர் ஈ.சங்கரநாராயணன்
தொடக்கவுரையாற்றினார். ஓய்வுபெற்ற அரசு தொல்லியல் அறிஞர் க.குழந்தைவேலன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியது:
நாடு, இனம், மொழி, பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்வதில் தொல்லியல் பெரும்பங்கு வகிக்கிறது. நாம் பேசும் மொழி, மக்களின் பெயர்கள், இறைவனின் பெயர், ஊர் பெயர்கள் ஆகியவை தமிழாக இல்லை.
உதாரணமாக நடராசர் என்ற பெயர் கல்வெட்டில் ஓரிடத்தில் கூட இல்லை. "ஆடவல்லான்' என்றே உள்ளது. வெப்பம் மிகுந்த காடு என்ற பொருளில் கல்வெட்டில் வரும் "திருச்சுரம்' என்ற ஊர் தற்போது திரிசூலம் என்று மாறிவிட்டது. இவ்வாறு வரலாற்றுக்கு அடிப்படைச் சான்று வழங்கும் கருவூலமாக தொல்லியல் துறை விளங்குகிறது என்றார்.
தமிழாசிரியர் மு.கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.