சங்கரன்கோவிலிலிருந்து ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு புதிய ரயில் தடம் அமைக்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, முன்னாள் மக்களவை உறுப்பினர் ராமசுப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், சங்கரன்கோவில் - பாம்புக்கோவில் சந்திப்பில் இருந்து வீரசிகாமணி, சேர்ந்தமரம், சுரண்டை, வீரகேரளம் புதூர், முத்துகிருஷ்ணப்பேரி, கழுநீர்குளம், கல்லூத்து, அத்தியூத்து, ஆலங்குளம், நல்லூர், மாறாந்தை, புதூர், சீதபற்பநல்லூர் வழியாக சுமார் 115 கி.மீ. தொலைவு திருநெல்வேலிக்கு புதிதாக ரயில்பாதை அமைக்க 2013ஆம் ஆண்டு மக்களவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிப்படை வேலைகளுக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் இன்று வரை இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் தடத்தில் ரயில்பாதை அமைந்தால் வியாபாரம், தொழில், விவசாயம் போன்றவை பெரும் வளர்ச்சி அடையும்.
எனவே, மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.