ஒரே நாளில் 3 வீடுகளில் ரூ.20 லட்சம் நகைகள் திருட்டு
திருநெல்வேலி மாநகரில் ஒரே நாளில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 77 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனி பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி சரஸ்வதி (59). கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
கோவை மற்றும் சென்னையில் உள்ள இரு மகன்கள் வீட்டுக்கு சரஸ்வதி அடிக்கடி சென்று வந்துள்ளார். சரஸ்வதி ஊருக்கு செல்கிறபோது, அவருடைய தம்பி ரகு, அக்கா வீட்டுக்குச் சென்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ரகு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 40 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. மேலும் சொத்து தொடர்பான ஆவணங்களும் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் திருடர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலவணிகர்புரம்: பாளையங்கோட்டை குலவணிகர்புரம் அம்பாசமுத்திரம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஞானமுத்து கனகராஜ் (45). பாளையங்கோட்டையில் விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவர் வெள்ளிக்கிழமை தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமார் 20 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழையபேட்டை: திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (45). புதுப்பேட்டையில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து சுமார் 17 பவுன் நகை மற்றும் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாநகரில் ஒரே நாளில் 3 இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.