திருநெல்வேலியை அடுத்த மானூர் அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் பியூலா எபனேசர்(36), ரூபி சிந்தியா(42), விமலா எப்சி (73), மெர்லின் (8), துரைசாமி(51) ஆகிய 5 பேரும் புளியங்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் வந்துகொண்டிருந்தனர். காரை துரைசாமி ஓட்டியுள்ளார். இவர்கள் மானூர் பிள்ளையார்குளம் விலக்கு அருகே வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பியூலா எபனேசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.