சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட அறிமுக விழா நடைபெற்றது.
மத்திய அரசு, ஜல்சக்தி அபியான் எனப்படும் நீர் மேலாண்மைத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, புதிய தடுப்பணைகளைக் கட்டுவது, வயல் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைப்பது, கிணறு தோண்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது.
விவசாயத்தை மேம்படுத்துதல் மற்றும் நீர் மேலாண்மைத் திட்டமே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழைக்காலம் மற்றும் வடகிழக்குப் பருவமழைக்காலங்களில் இத் திட்டத்தின் செயலாக்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியப் பகுதிகளில் மத்திய அரசின் நிதி ஆயோக் இயக்குநர் ராஜேஷ், மத்திய நீர் மின்சக்தி நிலைய விஞ்ஞானி ரங்கநாத் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இதில், ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் தேவர்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, குலசேகரமங்கலம், வெள்ளாளன்குளம், கீழநீலிதநல்லூர் பகுதிகளில் கான்கிரீட் தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்பார்வையிடப்பட்டு, அவை துரிதமாக அமைத்திட அறிவுறுத்தப்பட்டன.
ஆய்வின்போது, திருநெல்வேலி உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ருக்மணி, ஜெயராமன், சிவகுமார், பொறியாளர்கள் முருகேசன், சங்கர், பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.