செங்கோட்டை அருகே கார் - லாரி மோதல்: தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் 3 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே கார் மீது லாரி மோதியதில் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே கார் மீது லாரி மோதியதில் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (31). இவர் தனியார் நிதி நிறுவனத்தின் போக்குவரத்துப் பிரிவில் மேலாளராக இருந்துவந்தார். இதே நிறுவனத்தின் பொன்னமராவதி கிளை மேலாளர் ரமேஷ் (38), புதுக்கோட்டை மண்டல மேலாளர் செந்தில்குமார் (31), திருப்பத்தூர் கிளை மேலாளர் விஜயகுமார் (33), ஆலங்குடி கிளை மேலாளர் காஜாமைதீன் (40). இவர்கள் 5 பேரும் சனிக்கிழமை காரில் குற்றாலம் வந்துள்ளனர். குற்றாலம் அருவிகளில் குளித்துவிட்டு, கேரள மாநிலம், ஆரியங்காவில் உள்ள பாலருவிக்கு காரில் சென்றனர். செங்கோட்டை அருகேயுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்றபோது, கேரள மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றிவந்த லாரி, கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.
புளியரை போலீஸார் மற்றும் செங்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் செந்தில்குமார், பாண்டீஸ்வரன், ரமேஷ் ஆகியோர் காரிலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் இருந்த காஜாமுகைதீன், விஜயகுமார், லேசான காயமடைந்த லாரி ஓட்டுநர் தருமபுரியை சேர்ந்த சரவணன் (31) ஆகிய மூவரையும் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்குப் பிறகு அவர்கள் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து புளியரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com