திருநெல்வேலியில் புத்தகத் திருவிழா நடத்தக் கோரி பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கவிஞர் பே.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அளித்த மனு:
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் பாளையங்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்போடு கடந்த 2013, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தோடு இணைந்தும், 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தோடு இணைந்தும் மாவட்ட நிர்வாகம் புத்தகத் திருவிழாவை நடத்தியது.
இந்தப் புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கும், புத்தக ஆர்வலர்களுக்கும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பயனாக அமைந்தது. 2018-ஆம் ஆண்டின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு எப்போது புத்தகத் திருவிழா நடக்கும் என திருநெல்வேலி மாவட்ட மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிட, மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை புத்தகத் திருவிழா-2019-ஐ நடத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.