திருநெல்வேலியை அடுத்த மானூரில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தான்.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த்(41). இவரது மகன் நிகில் பிரியன்(8). இவர் அங்குள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் விஜய் ஆனந்த் வெள்ளிக்கிழமை இரவு மானூரில் உள்ள தன்னுடைய அண்ணன் வீட்டுக்கு விழாவுக்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு பந்தல் போட்டிருந்த இரும்புக் கம்பியைப் பிடித்து நிகில் பிரியன் விளையாடியுள்ளார். அப்போது மின்விளக்குக்கு செல்லும் மின்சாரம் கம்பியில் கசிந்து எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது பாய்ந்ததாம்.
இதையடுத்து சிறுவனை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் உயிரிழந்தான். இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.