சமூக ஆர்வலர் முகிலனுக்கு பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தவேண்டும் என பிரதமர் மோடிக்கு திருநெல்வேலி மாவட்ட பாஜக பொதுச்செயலர் டி.வி.சுரேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடித விவரம்:
முகிலன் மீது கரூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் பதிவானது. இதையடுத்து அவர் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தலைமறைவானார். அவரை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.
தற்போது முகிலன் ஆந்திரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினார். கடந்த 6 மாத காலமாக உளவுத்துறை போலீஸாரால் கூட கண்டறியமுடியாத இடத்தில் இருந்துள்ளார். எனவே இவருக்கு பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பதை கண்டறியவேண்டும். அதற்கு இந்திய புலனாய்வுத் துறையினர் முகிலனுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.