அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலர் பி. ஜவாஹர்லால் நேரு வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி தேதி என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, தேர்வர்கள் ஜூன் 24ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த 2014, 2017 இல் நடத்தப்பட்டது. தற்போது 2019 இல் நடத்துவதற்குத் தயாராகிவரும் ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி தேதி எனவும் அறிவித்துள்ளது.
இதில், இடர்பாடு என்னவெனில், முதுகலை இரண்டாம் ஆண்டு படித்த மாணவ, மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தேர்வான ஆண்டு, தேர்வு முடிவு வெளியான தேதி, மதிப்பெண் சதவீதம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, இப்பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள சுயநிதிக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவியர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதமுடியாத சூழல் உள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், போட்டித் தேர்வெழுத வசதியாக பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியாகும்வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிப்புச் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.