வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் அப்பாவு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் இரா. ஆவுடையப்பன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், வேலூர் மக்களவைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து திமுக வெற்றிக்காக தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்; மாநில இளைஞர் அணிச் செயலராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தல்; மறைந்த கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொண்டரணி மாநில துணை அமைப்பாளர் எம்.ஆவின் ஆறுமுகம், ஒன்றியச் செயலர்கள் இரா.குமார், கூ.சு.ராமசந்திரன், நகரச் செயலர் கி.கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.