சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயில் நாகசுனைத் தெப்பத்தில் புறாக்கள் இறந்து கிடந்தன.
இக்கோயிலில் ஆடித் தவசு திருவிழா வருகிற ஆக. 3ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. மேலும் புதன்கிழமை ஆடி அமாவாசை என்பதால், பக்தர்கள் திதி கொடுக்க இக்கோயில் தெப்பத்துக்கு வருவர். இந்நிலையில் கோயில் நாகசுனைத் தெப்பத்தில் தண்ணீர் வெகுவாகக் குறைந்து சிறு குட்டைபோல் காட்சியளிப்பதும், சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுவதும் பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
இதற்கிடையே இந்த தெப்பத்தில் கடந்த திங்கள்கிழமை 2 புறாக்கள் இறந்து கிடந்தன. செவ்வாய்க்கிழமை மேலும் 5 புறாக்கள் தண்ணீருக்குள்ளும் பாறையிலும் இறந்து கிடந்தன.
ராஜகோபுரம் மற்றும் கோயில் உள்பிரகாரங்களில் அதிகளவில் காணப்படும் புறாக்கள், கடந்த இரண்டு நாள்களாக தெப்பத்தில் இறந்து கிடப்பது பக்தர்களிடையே மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.