தென்னகக் கட்டட மற்றும் அமைப்புசாரா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜெபாகார்டன் பகுதியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் நலவாரியத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பயனாளர்களின் விண்ணப்பங்களை ஏற்று உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரியத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை எழுத்துப்பிழைகளைக் காரணம் காட்டி நிறுத்திவைத்துள்ளதை மாற்றி உடனே உதவித்தொகை வழங்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய பதிவுச் சங்கங்களைப் பாரபட்சத்துடன் நடத்தாமல் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கக்கோருவது, ஓய்வூதியதை விலைவாசிக்கு ஏற்ப மாதம் ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு பாரத காந்திஜி பொதுத்தொழிலாளர் சங்க நிர்வாகி வி.மு. ராஜேந்திர காந்தி தலைமை வகித்தார்.
த. ரூபா தங்கதுரை, அ. பீட்டர், ஜெ. சுப்புலட்சுமி, ஜே.கே. அப்துல்மஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னகக் கட்டட மற்றும் அமைப்புசாரா சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் கண்மணிமாவீரன், நிர்வாகிகள் மாடசாமி, வேல்முருகன், சிவராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.