நெல்லையப்பர் கோயிலில் காலசம்கார மூர்த்தி சுவேதகேதுவிற்கு எமபயம் நீக்கிய திருவிளையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இரவில் செப்புத்தேரில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
சுவேதகேது என்ற அரசன் தனது மனைவியுடன் தீர்த்த யாத்திரை வருகையில் மரண அவஸ்தையில் மனைவி இறக்கிறார். திருநெல்வேலிக்கு வரும்போது சுவேதகேது அரசனுக்கு எமபயம் ஏற்பட்டது. இதனையடுத்து அரசன், நெல்லையப்பர் கோயிலுக்குள் சென்று மந்திரங்கள் ஓதி இறைவனிடம் சரணாகதி அடைகிறார். அப்போது காலன் அரசனை ஆட்கொள்ள, அந்த பாசமானது இறைவன் மீதும் விழுந்தது. காலனை இறைவன் காலால் உதைத்தார். இறைவன் அரசனிடம் மனம் வருந்தி மாள வேண்டாம் என்றும், அரசன் இஷ்டப்பட்டு தானே முக்தியடைய இறைவன் அருள்பாலித்த திருவிளையாடல் வைகாசி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் நடைபெற்றது.
நிகழாண்டு, வைகாசி அஸ்த நட்சத்திரமான புதன்கிழமை காலை நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு ஹோமம், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி, அம்பாள் உள்பட பஞ்சமூர்த்திகள் செப்புத்தேரில் எழுந்தருளி திருநெல்வேலி நகர ரத வீதிகளில் உலா வந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.