களக்காட்டில் தினமும் 8 மணி நேர மின்வெட்டு அமலில் இருப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
களக்காடு துணைமின்நிலையத்தில் இருந்து களக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக தினமும் 5 முதல் 8 மணி நேரம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதால் வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மின்வெட்டைக் கண்டித்து திமுக சார்பில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், தற்போது 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுவதை கண்டித்து திமுக, வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளன.