பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருநெல்வேலி மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாமிரவருணி ஆற்றுப்படுகையான கொண்டாநகரம், சுத்தமல்லி, குறுக்குத்துறை, மணப்படை வீடு, திருமலைக்கொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன் கோயில், கருப்பந்துறை, தருவை ஆகிய இடங்களில் உள்ள 15 தலைமை நீரேற்றும் நிலையங்களில் உள்ள 46 நீர் உறிஞ்சு கிணறுகளிலிருந்து 46.60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு 72 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கடும் வெப்பம் நிலவுவதால் மாநகராட்சியின் மூலம் வழங்கும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் குடிநீர்க் குழாய் கசிவுகள், அடிபம்பு மற்றும் விசைபம்புகள் பழுது, தினசரி விநியோக பாதிப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் மாநகராட்சி மக்கள் சேவை தொலைபேசி எண்ணில் (1800 425 4656) தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
பதிவு செய்யப்பட்ட புகார்களை நிவர்த்தி செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்த பின்னரே, அது புகார் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.