செங்கோட்டை குண்டாற்றில் கொட்டப்பட்ட மரக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டையில் உள்ள குண்டாற்று பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக, அப்பகுதி வழியாக கொண்டுசெல்லப்பட்ட தாமிரவருணி குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், புதிய பாலம் அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் இருந்த சுமார் 30 சிறிய தேக்குமரங்கள் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டப்பட்டன. இந்த மரக்கிளைகளின் கழிவுகள் குண்டாற்றில் கொட்டப்பட்டுள்ளன.
இதனால், விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர் தடுக்கப்படுவதாகவும், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, ஆற்றில் கொட்டப்பட்ட மரக்கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.