திசையன்விளை: திசையன்விளையில் கடன் வாங்கி தருவதாகக் கூறி, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் ராஜ். அவருடைய மனைவி மாரியம்மாள் (36). இவர், திசையன்விளை புளியடி தெருவைச் சேர்ந்த கணேசன் (63) என்பவரிடம் தனக்கு பணம் தேவைப்படுவதாகவும், யாராவது தெரிந்த நபரிடம் வாங்கி தருமாறும் கேட்டாராம். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து திசையன்விளை வருமாறு கூறினாராம்.
இதைத் தொடர்ந்து, திசையன்விளைக்கு வந்த மாரியம்மாளை, கணேசனும், அதே ஊர் மன்னர்ராஜா கோயில் தெரு ஜெயராஜன் மகன் மார்டின் சுதாகர் (26), முஸ்லிம் வடக்குத் தெரு சாகுல் அமீது மகன் முகமது யாசர் அராபத் (30) ஆகியோரும் சேர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில், 3 பேரையும் திசையன்விளை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.