தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பொது மேலாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மண்டல ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் பி.மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் இ.எம். பழனி, எட்டப்பன், எஸ்.சிவதாணு தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மோகன் தொடக்கவுரையாற்றினார். பொதுச் செயலர் எஸ்.வெங்கடாச்சலம், மாநிலச் செயலர் எஸ்.முத்துகிருஷ்ணன், மண்டலச் செயலர் பி.முத்து கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர்கள் நல அமைப்பின் மாநிலச் செயலர் கே.வி.குருசாமி சிறப்புரையாற்றினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, பணிக்கொடை, ஒப்படைப்புத் தொகை, விடுப்பு சம்பளம் போன்றவற்றை வழங்க வேண்டும்; 44 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; ஒவ்வொரு மாதமும் முதல் தேதி ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துணைப் பொதுச் செயலர் கே.ராமையா பாண்டியன் நன்றி கூறினார்.