திருநெல்வேலி அருகேயுள்ள குறிச்சிகுளத்தில் சீரான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குள்பட்ட குறிச்சிகுளத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சில தெருக்களுக்கு கடந்த 15 நாள்களாக சீராக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாழையூத்து போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.