நான்குனேரி சோதனைச்சாவடி அருகே வரமங்கைபுரத்தில் விதிமீறி நுழையும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு: மறுகால்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட வரமங்கைபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். ஆடு, மாடு, கோழி வளர்ப்பு எங்கள் பகுதியின் பிரதான தொழில். எங்கள் ஊருக்கு சாலை, போக்குவரத்து வசதி எதுவும் இல்லை.
எங்கள் ஊரின் அருகே நான்குவழிச் சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் எங்கள் ஊரின் வழியாக விதிமீறி செல்கிறார்கள்.
இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளதோடு, வெளியூர் நபர்கள் எங்கள் கால்நடைகளை திருடிச் செல்வதும் தொடர்ந்து வருகிறது. ஆகவே, எங்கள் பகுதியில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.