மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2017-18ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவிகள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை திரண்டு வந்தனர். அவர்கள் அளித்த மனு:
எங்கள் பள்ளியில் 2018-19ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முந்தைய கல்வியாண்டில் படித்த எங்களுக்கு இதுவரை மடிக்கணினிகள் கிடைக்கவில்லை. இதனால், உயர்கல்வி பயிலும்போது கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முடியாமலும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான கேள்விகளை பதிவு செய்து வைத்து படிக்க முடியாமலும் தவித்து வருகிறோம்.
ஏழை மாணவிகளாகிய எங்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினிகள் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.