குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் வரை தொடரும். நிகழாண்டில் சீசன் மிகவும் தாமதமாகவே தொடங்கியது. சில நாள்கள் சாரல் பெய்ததால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததுடன், சாரலும் இல்லை. இதனால் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரமாக சிறிதளவும், பெண்கள் பகுதியில் அதைவிடக் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது.
ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் 2 அருவிகளில் மிகவும் குறைந்த அளவிலும், ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரருவியில் மட்டும் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது.
பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து செல்கின்றனர்.