தமிழக கட்டடத் தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் பேச்சியப்பன் வரவேற்றார். கிழக்கு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வைரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், "அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் திட்டத்தின் கீழ் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட மத்திய அரசுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பது; தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கக்கோருவது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.