திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் தறிகெட்டு ஓடிய லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் இறந்தனர்.
செங்கோட்டை அருகேயுள்ள இலத்தூர் பகுதியிலிருந்து கேரள மாநிலத்துக்கு சிமென்ட் லாரி சென்றுகொண்டிருந்தது. செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் அருகே வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவர் மற்றும் மின் கம்பத்தில் மோதியது.
மேலும், செங்கோட்டையிலிருந்து அழகப்பபுரம் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு வயலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அழகப்பபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (23), துரை மகன் செளந்தரபாண்டியன் (32) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில், செளந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீஸார் விரைந்து சென்று மாரியப்பனை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
இதுகுறித்து செங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.