திசையன்விளை அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். மேலும், இருவர் பலத்த காயமடைந்தனர். திசையன்விளை அருகேயுள்ள சிவந்தியாபுரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் மணிகண்டன் (28), பெருமாள் மகன் கணேசன் (28) ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே வந்த தோப்புவிளையைச் சேர்ந்த ஜோசப் மகன் அஜித் டி சோதர் (20) என்பவரது மோட்டார் சைக்கிளும், இவர்களது வாகனமும் எதிர்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், மூவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.