பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் துணைக் குழு அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ஆர். மதுபால், கோட்ட பொதுச் செயலர் செ.முத்துகுமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு செய்து தரப்படவேண்டும். இந்த விசாரணையில் தமிழக மகளிர் ஆணையம் தலையிட வேண்டும். இதுபோன்ற குற்றச் செயல்கள் பெண்களுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் ஆர்.மதுபால், கோட்ட பொதுச் செயலர் செ.முத்துக்குமாரசாமி, இணைச் செயலர் ஆர்.எஸ்.செண்பகம் ஆகியோர் பேசினர். சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.துரைராஜ் பட்டன், பொன்னையா உள்பட பலர் பங்கேற்றனர்.