பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (மார்ச் 21) அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி தொலைத் தொடர்பு பொதுமேலாளர் ப.முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல்-ன் சலுகைகளை பெறுவதற்காக இம்மாதம் 21 ஆம் தேதி அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது மட்டுமல்லாது, வரும் 18 ஆம் தேதி வடக்கன்குளம் மற்றும் செங்கோட்டை தொலைபேசி நிலையங்களிலும், 19 ஆம் தேதி மேலப்பாளையம் தொலைபேசி நிலையத்திலும், 20 ஆம் தேதி பாவூர்சத்திரம் மற்றும் சேரன்மகாதேவி தொலைபேசி நிலையங்களிலும், 23ஆம் தேதியில் பாளையங்கோட்டை மற்றும் வள்ளியூர் தொலைபேசி நிலையங்களிலும் உள்ளூர் முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாமில் மறு இணைப்புகள், புதிய தரைவழி, பிராட்பேண்ட், பாரத் பைபர் அதிவேக இணையதள இணைப்புகள் மற்றும் 3ஜி செல்போன் இணைப்புகள், எம்.என்.பி. இணைப்புகள் (நம்பரை வேறு நெட்வொர்க்கிலிருந்து பி.எஸ்.என்.எல்லுக்கு மாற்றிக்கொள்வது) உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். கட்டண நிலுவை குறைபாடுகள் சரிசெய்வது ஆகியவை குறித்த சேவைகள் செய்துதரப்படும்.
சலுகைகள்: பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் ரூ. 180- க்கு செய்யப்படும் டாப் அப் களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது.
அதிவேக இன்டர்நெட்: பி.எஸ்.என்.எல். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இணைந்து அதிவேக இண்டர்நெட் இணைப்புகளை (பாரத் பைபர் இணைப்பு) கண்ணாடி இழை கேபிள் (ஆப்டிக்கல் பைபர் கேபிள்) மூலமாக வழங்கப்படுகிறது.
500 ஜிபி பிளானில் மாதவாடகை ரூ.777. திருநெல்வேலி நகரம், பேட்டை, சங்கர்நகர், வண்ணார்பேட்டை, பாளை அன்புநகர், என்.ஜி.ஓ. காலனி, வி.மு.சத்திரம், சாந்திநகர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், வடக்கன்குளம், தென்காசி தொலைபேசி நிலையப் பகுதிகளில் இதற்கான இணைப்புகள் வழங்கப்படுகிறது என அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.