மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றாலம் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்றாலம் அருவி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும், மலைப்பகுதியில் வெயில் காரணமாக புற்கள், மரக்கிளைகள் காய்ந்து சருகுகளாக மாறியுள்ளன.
இந்நிலையில் குற்றாலம் அருகேயுள்ள வெண்ணமலை என்ற வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்தது. இரவு 8 மணிக்கு பிறகு தீ மளமளவென பரவியது. தகவலறிந்ததும் குற்றாலம் வனவர் ஆரோக்கியசாமி தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.