பொள்ளாச்சியில் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென தேசிய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு (தமிழ்நாடு) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் தேசிய துணை ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை வெளியிட்ட அறிக்கை:
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
பெண்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதகங்களை இளம்பெண்கள், மாணவிகள் புரிந்து கொண்டு வரும் காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிற்க வைத்து உச்சபட்ச தண்டனை உடனடியாக வழங்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.