திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 140 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது என்றார் மாநகர காவல் ஆணையர் நீ.பாஸ்கரன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: மக்களவைத் தேர்தலையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைகள், நிலையான குழுக்களுடன் இணைந்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநகரப் பகுதியில் உள்ள 7 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதியில் மொத்தமுள்ள 420 வாக்குச்சாவடிகளில் 140 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. பிரச்னையை உருவாக்குபவர்கள் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளவர்களில் இதுவரை 95 சதவிகிதம் பேர் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். வாகனத் தணிக்கையில் துணை ராணுவப் படையினரும் போலீஸாருக்கு உதவ உள்ளனர் என்றார் அவர்.