பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆதிசேஷ வாகனத்தில் பெருமாள் சனிக்கிழமை வீதியுலா வந்தார்.
இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது.
சனிக்கிழமை இரவு ஆதிசேஷ வாகனத்தில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளிய பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இரட்டை கருட சேவையும், திங்கள்கிழமை (மார்ச் 18) யானை வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை (மார்ச் 19 ) இந்திர விமானம் மற்றும் புன்னைமர வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. 20 ஆம் தேதி திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்வான வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை 7.35 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு 7.30 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெறுகிறது. சனிக்கிழமை (மார்ச் 23) காலை தாமிரவருணியில் தீர்த்தவாரியும், இரவு 8.30 மணிக்கு சப்தாவர்ண திருவீதியுலாவும் நடைபெறுகிறது.