சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆனையூரில் கல்குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து, தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெருக்களில் கருப்புக் கொடி கட்டியதுடன், அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனர்.
ஆனையூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தையொட்டி தனியார் கல்குவாரி உள்ளது.
இந்தக் கல்குவாரியை மூடக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மக்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்ததில், கல்குவாரி இயங்குவதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த 5 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும், கல்குவாரி தொடர்ந்து இயங்கி வருகிறதாம்.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஊரின் நுழைவுவாயிலில்
அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும், தெரு மின்கம்பங்களில் கருப்புக் கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆனையூரைச் சேர்ந்த பூபதி என்பவர் கூறியதாவது: ஊருக்கு மிக அருகே கல்குவாரி இயங்குவதால், வீட்டுச் சுவர்களில் வெடிப்பு விழுகிறது. வெடி வைக்கும் போது கிராமமே குலுங்கும் அளவுக்கு சப்தம் உண்டாகிறது. கல்குவாரியால் தண்ணீர் இன்றி கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போராட்டம் நடத்தியும், நீதிமன்றத்தில் தடை பெற்றும் பலனில்லை என்பதால் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.