சாத்தான்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.51 லட்சம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலைப்புதூரைச் சேர்ந்த அ.ஜெனிட்டன் ஜோசுவா வந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தனசிங் தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, ரெட்டார்குளத்தைச் சேர்ந்த சு. மணிராஜ் என்பவரது காரில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 51ஆயிரத்து 150 இருந்தது தெரிய வந்தது. உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் பகுதியில் 2 இடங்களில் கைப்பற்றிய ரூ.2.51 லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரனிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.