ஆலங்குளம் அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக அவ்வூர் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வீடுகளுக்கு குடிநீர் முறையாக வரவில்லையாம். அப்படி வந்தாலும், குறைந்த நேரமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறதாம். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திங்கள்கிழமை அங்குள்ள உச்சிமாகாளி மாகாளி அம்மன் கோயில் அருகே திரண்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரோஸ்லின் சாவியோ, உதவி ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் அங்கு சென்று மக்களிடம் பேச்சு நடத்தினர். தொடர்ந்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன்பேரில், போராட்டம் முடிவுக்கு வந்தது.