சுரண்டையில் மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் செ.கிரேஸ் பால்தாய்(75). முதியோர் ஓய்வூதியம் வாங்கி வரும் இவரிடம், திங்கள்கிழமை மாலையில் மர்ம நபர் ஒருவர் அணுகி, கூடுதல் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாக கூறி படிவம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கையெழுத்தை வாங்கிய மர்ம நபர், நிரப்பிய படிவத்தை பக்கத்தில் உள்ள கடையில் இருக்கும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும். அப்போது கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் தங்கச் சங்கிலியை தன்னிடம் தந்துவிட்டு படிவத்தை அளித்த பின்னர் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதை நம்பிய கிரேஸ் பால்தாய், தனது கழுத்தில் அணிந்திருந்த 40 கிராம் தங்கச் சங்கிலியை , மர்ம நபரிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு பக்கத்து கடைக்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாமல் திரும்பிய போது மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.